திருச்சி மாநகரப் பகுதிகளில் நகைபறிப்பு, வாகனத்திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 4 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மாநகரில் நகைபறிப்பு, வாகனத் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் பேருந்து நிறுத்தம் அருகே தனிப்படையினர் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயற்சித்தனர்.
இதைத் தொடர்ந்துஅவர்களைப் பிடித்து விசாரித்ததில், திருச்சி பாலக்கரை அம்பேத்கர் குடிசைப்பகுதியைச் சேர்ந்த ஆ. அப்பு என்கிற அருண்குமார் (21), செந்தண்ணீர்புரம் பாரி தெருவைச் சேர்ந்த அ. அப்பு என்கிற வில்சன் ஆண்ட்ரூஸ் (30) என்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் ஓட்டி வந்த வாகனம் பாலக்கரை காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள திருட்டு வழக்கில் தொடர்புடையது என்பதும், அதை அப்பு என்கிற அருண்குமார் திருடியதையும் ஒப்புக் கொண்டார்.
இவர்கள் இருவரும் கோட்டை, பாலக்கரை, எடமலைப்பட்டிபுதூர், கே.கே.நகர் பகுதிகளில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் நகைகளைப் பறித்ததை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் அளித்த தகவலின் பேரில் திருச்சி காஜாபேட்டையில் பதுங்கியிருந்த ஆ. சுபாஷ்சந்திரபோஸ் (20), மயிலாடுதுறை ரயிலடியைச் சேர்ந்த கு. அன்பு என்கிற அன்பரசு (49) ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ரூ.2.88 லட்சம் மதிப்புள்ள 28 பவுன் தங்க நகைகளும், இரண்டு சக்கர வாகனம், செல்லிடப்பேசி, கடிகாரம் உள்ளிட்ட மொத்தம் ரூ.3.83 லட்சம் மதிப்புள்ள சொத்துகல் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.