திருச்சியில் நடைபெற்ற கல்வியியல் கல்லூரிகளுக்கிடையிலான தடகளப் போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள கல்வியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் திருச்சி ஜெ.ஜெ. கல்வியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
மாணவர்களுக்கு 8 பிரிவுகளிலும், மாணவிகளுக்கு 7 பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் பிரிவில் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி மாணவர் ஐ. சுரேந்திரபாபுவும், மாணவிகள் பிரிவில் தொட்டியம் கொங்குநாடு கல்வியியல் கல்லூரி மாணவி டி. சத்யாவும் தனிநபர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். மாணவ, மாணவிகளுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை புதுக்கோட்டை மாவட்டம் கைப்பற்றியது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் ( குற்றம் மற்றும் போக்குவரத்து) ஆ. மயில்வாகனன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கோப்பைகளையும், பரிசுகளையும் வழங்கினார். தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழக மதிப்புக் கல்வித் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் எம். சௌந்தரராஜன், இணைப் பேராசிரியர் எம். விஜயகுமார், ஜெ.ஜெ. கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜெ. பிரின்சி இமாகுலேட், உடற்கல்வி இயக்குநர்கள் கே. ஜெயராஜ் ( ஜெ.ஜெ.பொறியியல் கல்லூரி), டி. பிரசன்ன பாலாஜி ( தேசியக் கல்லூரி) உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.