தினந்தோறும் நீர் பங்கீட்டு முறை ஒன்றுதான் காவிரி நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாகும் என்றார் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளரும் கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளருமான செ. நல்லசாமி.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, நிரந்தரமானோர் அழிவதில்லை என்ற நூல் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி : தமிழக அரசு நீரா பானத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியளித்து உத்தரவு வெளியிட்டுள்ளது. கள், நீரா, பதனீர் உள்ளிட்டவை உணவுப்பொருட்கள் எனவும், அவை போதைப் பொருட்கள் இல்லை எனவும் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டு அரசும் ஏற்றுள்ளது. மேலும் மரம் ஏறி இவற்றை இறக்க அரசு அளித்துள்ள உரிமத்திலேயே இவற்றை விநியோகிக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் 47-ஆவது பிரிவு இதனை விளக்குகின்றது.
இந்நிலையில் நீராவுக்கு மீண்டும் அனுமதியளிப்பதும், அதுவும் ஏராளமான நிபந்தனைகளை விதித்திருப்பதும் தேவையற்றது.
காவிரி நதி நீர் பிரச்னைக்கு மாதந்தோறும் தண்ணீர் விடக்கோருவதை விட தினந்தோறும் நீர் பங்கீட்டு முறையை செயல்படுத்தினால் மட்டுமே நிரந்தர தீர்வு காணமுடியும்.
கரும்புக்கு ரூ.2550 என மத்திய அரசு விலை நிர்ணயத்துள்ள நிலையில், மாநில அரசு ஏதும் அறிவிக்கவில்லை. ஆனால் கரும்பு கொள்முதல் மட்டும் தொடர்ந்து வருகிறது. ரூ.1,630 கோடி நிலுவை உள்ள நிலையில் தொடர்ந்து கொள்முதல் செய்வதை விவசாயிகள் வேறு வழியின்றி அனுமதித்து வருகின்றனர். இதே போல வழங்கிய பொருளுக்கு வழங்கவேண்டிய தொகை போல, வேறு ஏதாவது ஒரு துறை அரசு ஊழியர்குளுக்கு சம்பள நிலுவைத் தொகை இருந்தால், அரசு வழங்காமல் இருக்க முடியுமா?
இந்தியாவில் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் , வறட்சி, வேளாண் பொருள் உற்பத்தி , பற்றாக்குறை அல்லது அதிக உற்பத்தி போன்று எல்லா வகையான காரணங்களாலும் விவசாயிகள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஜெயலலிதா படம் : உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் வைத்தது தவறு. அவ்வாறு படம் வைக்க திட்டமிட்டவர்கள், திறந்து வைத்தவர்கள் அனைவர் மீதும் நீதி மன்ற அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் நல்லசாமி.