தன்னுடைய கருத்தில், கொள்கையில் உறுதியாக இருந்தவர் தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா என்றார் இலக்கிய விமர்சகர் வீ.நோ. சோமசுந்தரம்.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா மே மாதம் 31 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நினைவைப் போற்றும் வகையில், பாவாணர் தமிழியக்கம் சார்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற படத்திறப்பு விழாவில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், குறும்பலாப்பேரியில் பிறந்தாலும், தங்கப்பா ஆசிரியராகப் பணியில் சேர்ந்தாலும், பின்னர் , பேராசிரியராகப் பணி உயர்ந்து பணியாற்றியது எல்லாம் புதுச்சேரியில்தான். தனது 17 வயதிலேயே எழுத் தொடங்கிய தங்கப்பா 50-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்திருக்கிறார்.
தமிழ், ஆங்கிலத்தில் நன்கு புலமை பெற்ற ம.இலெ. தங்கப்பா, அரவிந்தர், பாரதியார், பாரதிதாசன், வள்ளலாரின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
சங்கப்பாடல்களை மொழிபெயர்த்தமைக்காக ஆங்கிலத்துக்கான சாகித்ய அகாதெமி விருதையும், சோளக்கொல்லை பொம்மை என்ற நூலுக்காக தமிழ் பிரிவில் சாகித்ய அகாதெமி விருதையும் பெற்றவர் இவர். தமிழின் தலைச்சிறந்த நூலான முத்தொள்ளாயிரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் தங்கப்பா.
தமிழ், தமிழகத்தின் நலன் என்ற சிந்தனையில், கொள்கையில் உறுதியாக இருந்தவர் இவர்.
தான் கொண்ட கொள்கைகளிலும், கருத்துகளிலும் உறுதியாக இருந்தவர். சமரசம் இல்லாத போராளியாகத் திகழ்ந்தவர். தமிழ் வளர்ச்சிக்காக தன்னையை அர்ப்பணித்துக் கொண்டவர் ம.இலெ.தங்கப்பா என்றார் வீ.ந.சோமசுந்தரம்.
இந்த நிகழ்வுக்கு முதுமுனைவர் இரா. இளங்குமரனார் தலைமை வகித்தார். நமக்குள்ளே ஐந்தாம்படை என்ற தலைப்பில் முனைவர் பி.தமிழகன் பேசினார்.
பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் கு.திருமாறன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்று ம.இலெ. தங்கப்பாவை நினைவு கூர்ந்து பேசினர்.