சபரிமலை ஐயப்பன் கோயிலில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள விரும்புவோர் வரலாம் என அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது: ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜை முடிந்தவுடன், சன்னிதானம் முதல் பம்பை வரையிலான பாதை மற்றும் கோயில் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளை தூய்மை படுத்தும் பணிகளில் ஐயப்ப சேவை சங்கத்தினரும் ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில் நிகழாண்டு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ஜூன் 18-ஆம் தேதி (திங்கள்கிழமை) திருச்சியிலிருந்து குழு புறப்படுகிறது.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் (திருச்சி மற்றும் பெரம்பலூர் ) சார்பில் மொத்தம் 210 பேர் இக்குழுவில் அழைத்துச் செல்லவும், அனைவரும் திங்கள் கிழமை இரவு 7 மணியளவில் திருச்சி தென்னூர் உக்கிரமாகாளிஅம்மன் கோயிலிலிருந்து புறப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே உழவாரப்பணிகளுக்கு செல்ல விரும்புவோர் அதற்கேற்ற வகையில், தென்னூர் வந்து சேரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.