மாநகராட்சி குறைதீர் முகாமில் 43 மனுக்களுக்கு உடனடி தீர்வு
திருச்சி மாநகராட்சி சார்பில் 4 கோட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற குறைதீர் முகாமில் 43 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், பொன்மலை, அரியமங்கலம், திருவரங்கம், கோ.அபிஷேகபுரம் ஆகிய 4 கோட்டங்களிலும் அந்தந்த உதவி ஆணையர்கள் தலைமையில், சனிக்கிழமை மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், திருவரங்கம் கோட்டத்தில் 22 மனுக்கள், அரியமங்கலத்தில் 22, பொன்மலை கோட்டத்தில் 43, கோ. அபிஷேகபுரத்தில் 101 என மொத்தம் 193 மனுக்கள் பெறப்பட்டன. பிறப்பு, இறப்பு சான்றிதழ், சர்வே வரைபட நகல், புதிய குடிநீர் இணைப்பு, புதை சாக்கடை இணைப்பு, புதிய வீட்டு வரி விதிப்பு, சொத்து வரி பெயர்மாற்றம், காலிமனை வரி, மனை வரன்முறைப்படுத்துதல் உள்ளிட்ட மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில், முகாம் இடத்திலேயே தீர்வு காணும் வகையிலான 43 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு உரிய ஆணைகள் வழங்கப்பட்டன. இதர மனுக்கள் மீது 15 தினங்களில் நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்கப்படும் என்றார் ஆணையர்.