திருச்சியில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
திருச்சியிலிருந்து தேவாரம் நோக்கி அரசுப் பேருந்து நவ. 11 ஆம் தேதி ராம்ஜிநகர் பகுதியில் சென்றது.
அப்போது சோமரசம்பேட்டை அருகேயுள்ள எட்டரைக்கோப்பு இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த மதுக்குமார், பவித்திரன், ராஜமாணிக்கம் ஆகிய பயணித்த இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியது. இதில், மதுக்குமார் உயிரிழந்தார். மற்ற இருவரும் திருச்சி தனியார் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், பவித்திரன் செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
நகை பறிப்பு என பொய் புகார்: திருச்சி தென்னூர் சாஸ்திரிசாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் கா. சேத்தன் ராஜ்கர் (43). இவர் செவ்வாய்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் பொன்மலையை அடுத்துள்ள மேலக் கல்கண்டார் கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவரை வழி மறித்த மர்ம நபர் ஒருவர் அவரை மிரட்டி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலி, கையில் இருந்த 3 பவுன் பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துச் சென்றதாக, பொன்மலை போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் அவர் பொய்யான புகார் அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை சிறு வழக்குப் பதிவு செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.