திருச்சி மாவட்டம் மணப்பாறையில் புயல் பாதிப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை எனக்கூறி தவிட்டுப்பட்டி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறையில் கஜா புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள், 1500 மின்கம்பங்கள், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. இந்நிலையில், சனிக்கிழமை புயல் பாதிப்புகளை மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை, மாநிலங்களவை உறுப்பினர் டி. ரெத்தினவேல், எம்எல்ஏ ஆர்.சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மணப்பாறை பகுதியை அடுத்த தவிட்டுப்பட்டி, உசிலம்பட்டி ஆகிய கிராமங்களில் யாரும் வந்து புயல்பாதிப்புகளை கணக்கிடவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் புதுகாலனி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பேச்சு நடத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் மணப்பாறை - கோவில்பட்டி போக்குவரத்து சுமார் அரைமணி நேரம் பாதிக்கப்பட்டது.