தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திருச்சி மாநகராட்சியில் நிகழாண்டில் 4 ஆயிரம் தனிநபர் கழிப்பறைகள் கட்டப்படும் என்றார் மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன்.
திருச்சி மாநகராட்சி, கிராமாலயா, அலைகள் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக கழிப்பறை தின விழாவுக்குத் தலைமை வகித்து அவர் பேசியது:
இல்லம்தோறும் கழிவறைகள் தேவை என்பதன் அவசியத்தை உணர்த்துவதற்காகவே உலக கழிப்பறை தினம் கொண்டாடப்படுகிறது. திருச்சி மாநகராட்சியில் 450 பொது கழிப்பிடங்கள் கட்டப்பட்டு மகளிர் குழுக்கள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவைத்தவிர பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 76 கழிப்பறைகளும் மாணவர்களின் சுகாதாரத்தை பேணும் வகையில் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தனிநபர் இல்ல கழிப்பிடங்களை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கி அனைத்து வீடுகளுக்கும் கட்டாய கழிப்பறை என்ற நிலையை உருவாக்கியுள்ளது. திருச்சி மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நிகழாண்டில் 4 ஆயிரம் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டப்படும் என்றார் அவர்.
இந்நிகழ்வில் மாநகரப் பகுதியில் கழிப்பறைகளை தூய்மையாக பராமரித்த 50 பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நகரப் பொறியாளர் எஸ். அமுதவள்ளி, நகர் நல அலுவலர் ஜெகநாதன், கிராமாலயா தொண்டு நிறுவனத்தினர், மாநகராட்சி பணியாளர்கள், மகளிர் குழுக்கள் என ஏராளமானோர் பங்கேற்று, கைகளை தினமும் சோப்பு கொண்டு சுத்தம் செய்ய உறுதிமொழியேற்றனர்.