திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அறுந்து கிடந்த மின் கம்பிகளில் சிக்கிய பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மின்வாரியத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை அடுத்த பனந்தோப்பைச் சேர்ந்தவர் ரெஜினாமேரி. செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டின் பின்பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபடிருந்த போது, அறுந்துகிடந்த மின் கம்பிகளில் சிக்கி காயமடைந்தார். இதையடுத்து அவரை அப்பகுதியிலுள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மின் கம்பிகள் அறுந்து கிடந்ததைக் கூட அறியாமல் மின் விநியோகம் செய்த மின்வாரியத்தைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அரசுப் பேருந்தையும், சிற்றுந்தையும் சிறைபிடித்து, சாலையில் மரங்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த மணப்பாறை போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு,பேருந்துகளை விடுவித்தனர்.