திருச்சி மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.360 கோடிகடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி.
திருச்சியில் தலித் இந்திய வர்த்தகத் தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அரசுத் துறைகளில் தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்து மேலும் அவர் பேசியது:
தொழில்முனைவோருக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டாலும் ஒருசிலரே வெற்றியாளர்களாகப் பரிணமிக்கிறார்கள். இதற்குகாரணம் அவர்களிடம் தொழில் தொடங்குவதற்கு போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதே காரணமாகும்.
தொழிலைத் தொடங்கும் முன்பு தொழிலை நம்மால் செய்ய இயலுமா, இயலாதா, போட்டியாளர்கள், வாடிக்கையாளர்கள், சவால்கள் ஆகியவை குறித்து விரிவான ஆய்வு செய்த பிறகே தொடங்க வேண்டும். சரியான தொழில் முனைவோர்களை இக்கூட்டமைப்பு அடையாளம் கண்டு, அவர்களை ஊக்கப்படுத்தி,முறையான தொழிற்பயிற்சிகளையும் வழங்கி சிறந்த தொழிலதிபர்களை உருவாக்க வேண்டும். மாவட்டத்தில் 10,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இவர்கள் முறையாக கடனைத் திருப்பிச் செலுத்துவதால் வங்கிகள் மானியத்துடன் கடன் வழங்கத் தயங்குவதில்லை. அடமானம் பெறாமல் இதுவரை ரூ.170 கோடி அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
நிகழாண்டில் ரூ.360 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர். தலித் இந்திய வர்த்தகத் தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஜி.பி.லெனின்,துணைத் தலைவர் நல்.தமிழழகன்,திருச்சி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.வைத்தியநாதன்,சிட்கோ கிளை மேலாளர் எம்.அனிதா
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரா.தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.