பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில் ஒவ்வொருவரும் பங்காற்ற வேண்டும் என்றார் திருச்சி கள விளம்பர அலுவலர் கே.தேவி பத்மநாபன்,
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், திருச்சி கள விளம்பர அலுவலகம் சார்பில், பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தையைக் கற்பிப்போம் என்ற பெயரில் போஷன் அபியான், தூய்மை இந்தியா இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி புள்ளம்பாடி அருகிலுள்ள புதூர்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று அவர் பேசியது:
கல்வி மூலமே பெண்கள் முன்னேற முடியும். பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக மத்திய அரசு பெண் குழந்தைகளைக் காப்போம், பெண்கள் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. நாட்டின் மக்கள் அதிகரித்த போதிலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இதனை சரி செய்யும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில் ஒவ்வொருவரும் பங்காற்ற வேண்டும் என்றார் அவர்.திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டஅலுவலர் புவனேசுவரி,
திருச்சி கள விளம்பர உதவியாளர் கே. ரவீந்திரன், மருத்துவ அலுவலர் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசப் பெருமாள், குழந்தை வளர்ச்சித் திட்டஅலுவலர் பிருகதீசுவரி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முன்னதாக நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் புதூர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.