நம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மைதான் நம்மிடம் இருக்கும் தடை என்றார் காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுயூசன்ஸ் நிறுவன மேலாளர் தரணி ஜெயராமன்.
திருச்சி குண்டூர் எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், முதலாமாண்டு வகுப்புகளைத் தொடக்கி வைத்து அவர் பேசியது:
மாணவர்கள் மேடைப் பேச்சு, குழு உரையாடல், கேள்வித்திறன் மூலமாக அறிவுடையவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். நம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மைதான் நம்மிடம் இருக்கும் தடையாகும். உங்கள் பலத்துடன் விளையாடுங்கள், இயலாமையுடன் விளையாடாதீர்கள். உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மற்ற மாணவர்களை ஒப்பிட்டு பெற்றோரும் பேசக்கூடாது. தங்கள் குழந்தைகளிடம் இருக்கும் திறமையைக் கண்டறிந்து, அதை மேம்படுத்த வேண்டும் என்றார் தரணி ஜெயராமன். எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ. முகமது யூனுஸ் தலைமை வகித்துப் பேசுகையில், கல்லூரியில் கற்பதற்கு ஏற்ற அமைதியான சூழல், வசதி உள்ளதால், அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்றார்.
கல்லூரியின் சிறப்பசம்ங்கள் குறித்து முதல்வர் எக்ஸ். சுசன் கிறிஸ்டினா எடுத்துரைத்தனர். கல்லூரியின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை இயக்குநர் டி. கார்த்திக்கேயன் வாழ்த்தினார். உதவிப் பேராசிரியர் சி. ஜீவானந்தம் சிறப்பு விருந்தினர்கள் குறித்த அறிமுகவுரையை வழங்கினார். ஏற்பாடுகளை வேதியியல் துறைப் பேராசிரியர் முனைவர் ஏ. அப்பாஸ் அலி செய்தார். முன்னதாக, பேராசிரியர் எஸ். சையது ஜாகிருல்லா வரவேற்றார். மேலாண்மைத் துறைத் தலைவர் ஜி. சதீஷ்குமார் நன்றி கூறினார்.