மணப்பாறை அருகே நின்றிருந்த லாரி மீது அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை மோதியதில் காயமின்றி பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து ரயில்வேக்கு சொந்தமான இரும்பு பொருள்களை ஏற்றிய லாரி மதுரை நோக்கி சென்றது. லாரியை லால்குடியைச் சேர்ந்த துரைராஜ் மகன் செளந்தரராஜன்(32) ஓட்டினார். இந்த லாரி வெள்ளிக்கிழமை அதிகாலை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே சொரியம்பட்டி பிரிவு அருகே நின்றிருந்தது. அப்போது, சென்னையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி 20 பயணிகளுடன் வந்த அரசுப் பேருந்து ஓட்டுனர் லாரியின் பின்புறத்தில் மோதினார். இதில் அரசுப் பேருந்தின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. விபத்தில் பேருந்து ஓட்டுநரான திருச்செந்தூரைச் சேர்ந்த பால்ராஜ் மகன் ஜெனிபர்(35) லேசான காயத்துடன் தப்பினார். பேருந்தில் இருந்த பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த விபத்து நேரிட்ட போது சென்னையிலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து, விபத்துக்குள்ளான வாகனங்கள் மீது மோதிவிடக் கூடாது எனக் கருதிய ஓட்டுநர் பேருந்தை திருப்பிய போது சாலையின் தடுப்புச் சுவரில் ஏறி நின்றது. இதில் சொகுசுப் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.
விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.