மூச்சுத் திணறல் காரணமாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ரா. ராஜன் என்கிற கலியராஜன் (54). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், 2018, செப்.27 ஆம் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஏற்கெனவே சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த கலியராஜனுக்கு செவ்வாய்க்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சிறை வளாகத்திலுள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் கைதிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி, அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.