நடந்துமுடிந்த பிளஸ் 2 தேர்வில் திருச்சி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கு ஆணையர் ந. ரவிச்சந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், கீழரண்சாலையில் உள்ள மதுரம் மைதானத்தில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், எம். விஜயலட்சுமி, ச. தீபா, அ. அகல்ய பிரியதர்ஷினி ஆகிய மூன்று மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனர். இந்த மாணவிகளுக்கும், திறம்பட பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் சனிக்கிழமை பாராட்டு தெரிவித்தார்.
ஆசிரியர்களையும், மாணவர்களையும் நேரில் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், உதவி ஆணையர் திருஞானம், பள்ளித் தலைமையாசிரியர் ஆர். ராமகிருஷ்ணன், உதவி தலைமையாசிரியர் ஆர். வாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.