திருச்சி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அடையாளம் தெரியாத இருவரின் சடலங்கள் கிடந்தது குறித்து போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மகாத்மாகாந்தி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பெண் உள்நோயாளிகள் தங்கியிருக்கும் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்றும், வெளிநோயாளிகள் பிரிவுக்கான அரசு மருத்துவமனையின் பழைய கட்டடம் அருகே 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்றும் கிடந்தது. இவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி பத்மநாபன் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவமனை காவல்நிலைய போலீஸார் இரு சடலங்களையும் பிரேத பரிசோதனைக் கிடங்கில் வைத்துள்ளனர்.மேலும், வழக்குப்பதிவு செய்து சடலங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.