திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சைக்கிள் கடைக்காரருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி பாலக்கரை கூனிபஜார் கோரி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் அப்பாஸ் என்ற முகம்மது இலியாஸ் (43). இவர், அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
கொடுத்ததாக அவரது தாயார் கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் கடந்த 20.2.2018 -இல் வழக்குப்பதிவு செய்து அப்பாஸை கைது செய்தனர்.
இவ்வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு சார்பில் வழக்குரைஞர் ஆர்.வெங்கடேசன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.மகிழேந்தி அப்பாஸுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதத் தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.