தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் எந்தப் பிரச்னைகளையும் இனம் கண்டு அவற்றை மனித நேயத்தோடு அணுக வேண்டியது அவசியம் என்றார் ஐ.டி.சி.நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் ஆர்.செங்குட்டுவன்.
திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள பிம் எனப்படும் பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின் 29ஆவது பட்டமளிப்பு விழாவில் முதுநிலை பட்ட மேலாண்மை மேற்படிப்பை முடித்த 153 பேருக்கு பட்டங்களை வழங்கி அவர் மேலும் பேசியது..
தொழில் நுட்பம் நவீனமான முறையில் மாறி வருகிறது.வளர்ந்து வரும் தொழில் நுட்பமானது நமது வாழ்க்கையில் மட்டுமில்லாமல் பொது வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை தந்து கொண்டிருக்கிறது.அதற்கேற்றார்போல் நாமும் நம்மை மாற்றிக் கொண்டு வாழ்க்கையை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் எந்தப் பிரச்னைகளையும் மனித நேயத்தோடு அணுகிட வேண்டும்.பிரச்னைகளை இனம் கண்டு அவற்றை தீர்வு காணவேண்டிய பொறுப்பு மேலாளர் போன்ற தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இருக்க வேண்டியது அவசியமாகும்.
மேலாண்மைப் படிப்புகளை படித்து விட்டு உயர்ந்த பதவிகளுக்கு வருபவர்கள் அதற்கேற்றவாறு வாய்ப்புகள் கிடைக்கும் போது அதை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக, விழாவுக்கு பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.கருத்தையா பாண்டியன் தலைமை வகித்தார்.நிறுவனத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் ந.பாலபாஸ்கர்,தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை மேலாண்மை படிப்புக்கான தலைவர் சங்கரன் வரவேற்று பேசினார்.
விழாவில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் முகம்மது நபீஸ், எஸ்.அரவிந்த் ஆகியோருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டன.