வாழ்வில் பலம், பலவீனத்தை அறிந்தால் வெற்றி பெறலாம் என்றார் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத்தலைவர் தமிழருவி மணியன்.
திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் விடை தேடும் வினாக்கள் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இயக்கத்தின் நிறுவன தலைவரும், நூலாசிரியருமான தமிழருவி மணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், அன்பை அடிப்படையாக கொண்டு தான் வாழ வேண்டும் என அனைத்து மதங்களும் கூறுகிறது. மனிதர்கள் மற்றவர்கள் மீது அன்பு செலுத்தும் போது தான் வாழ்வியல் தத்துவத்தில் வெற்றி பெற்றவர்களாகிறார்கள்.
கட்டுபாடு உடையவர்களை இந்தியர்கள் வெறுப்பதால் தான் வாழ்வியல் தத்துவத்தை போதிக்க கூடிய புத்தமதம் துரத்தியடிக்கப்பட்டு, அவற்றை ஜப்பானிய மக்கள் பின்பற்றி வாழ்வியல் ஒத்திசைவை உருவாக்கி கொண்டிருக்கின்றனர். மனித வாழ்வியல் நிலையில் மூன்று நிலை உள்ளது போல அறிவு நிலையிலும் உள்ளது. எனவே அறிவை பெற முடியாத நிலையில் ஞானத்தை பெற முடியாது, வாழ்வில் பலம், பலவீனத்தை அறிந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். சாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு வாழ்க்கையில் உள்ள வெறுப்புகளை போக்க அன்பை செலுத்தினால் வெற்றி பெறலாம் என்றார்.
முன்னதாக மனித நேய அறக்கட்டளை நிறுவனத்தலைவரும், சென்னை மாநகர முன்னாள் மேயருமான சைதை துரைசாமி நூலை வெளியிட புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்விற்கு, காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலர் ஆ.கணேசன் தலைமை வகித்தார். ஏஜிஎம் மேல்நிலைப்பள்ளி கல்விக்குழுமத்தின் தலைவர் ஆர்.மனோகரன் முன்னிலை வகித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மூத்த வழக்குரைஞர் டி.கே.கோபாலன், முன்னாள் மக்களவை உறுப்பினர் சிப்பிபாறை ரவிச்சந்திரன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.