திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் உள்ள அருள்மிகு சென்னப்பசுவாமி, மகாலெட்சுமி கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி வாங்கியும் விநோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் ஆடி 28-ஆம் பெருக்கை முன்னிட்டு, குறிப்பிட்ட இன மக்களின் பொது தெய்வங்களான சென்னப்ப சுவாமி, மகாலெட்சுமி அம்மாள், பீரேஷ்வர சுவாமி (சிவ பெருமாள்), அகோர வீரபத்திர சுவாமி, ஏழு கன்னிமார்கள், பாப்பாத்தி அம்மன் மற்றும் காவேரியம்மன் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நிகழாண்டிற்கான சிறப்பு வழிபாடு கோயில் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில், நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக கோயில் பூசாரி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நேர்த்திக்கடன் வைத்திருந்த பெண்களுக்கு சாட்டையடி வழிபாடும் நடைபெற்றன. பின்னர் சுவாமிக்கு பொங்கலிட்டு படையல், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில், குறிப்பிட்ட இன மக்கள் திரளாகக் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.