நெல் அடிக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி சாவு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திங்கள்கிழமை நெற்கதிர்களை அடிக்கும் இயந்திரத்தில் பெண் தொழிலாளி சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மண்ணச்சநல்லூர் வேலுமுதலி சந்து தெருவைச் சேர்ந்த வீரப்பன் மகன் மருதை. இவருக்குச் சொந்தமான வயலில் நெல் அறுவடை செய்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, மேல ஸ்ரீதேவிமங்கலம் ஓடப்பாலம் பகுதியில் உள்ள இடத்தில் திங்கள்கிழமை காலை இயந்திரம் மூலம் நெல் மணிகளைப் பிரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராசாம்பாளையம் மேலூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் மனைவி சித்ரா (32) எதிர்பாராதவிதமாக, நெல் அடிக்கும் இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நெல் அடிக்கும் இயந்திர உரிமையாளர் மூவானூர் பகுதியினைச் சேர்ந்த ஸ்ரீரங்கன் (66). அவரது மகன் ராதாகிருஷ்ணன் (இயந்திர ஓட்டுநர்) (28) ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.