துறையூர் பகுதியில் மினி பேருந்துகள் முறையாக இயக்கப்படுவது தொடர்பாக கடந்த புதன், வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
புகார்களின் அடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் கீழ் ஸ்ரீரங்கம் வட்டார மோட்டார் வாகன அலுவலர் பாண்டியன் உத்தரவின்பேரில் துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வக்குமார், துறையூர் பகுதியில் வியாழக்கிழமை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அனுமதி வழங்கப்பட்ட வழித்தடத்தில் 3 மினி பேருந்துகள் இயக்கப்படாதது, துறையூர் செங்காட்டுப்பட்டி வழித்தடத்தில் இயக்கப்பட்ட 2 மினி பேருந்துகளில் அரசின் உரிய அனுமதியின்றி குறைந்தபட்சமாக ரூ. 5 முதல் அதிகபட்சமாக ரூ. 9 வரை பயணக்கட்டணம் உயர்த்தி பயணச் சீட்டு வழங்கியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட 5 மினி பேருந்துகளுக்கு அபாரதம் விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் துறையூர் பகுதியில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற 7 கனரக வாகனங்களில் 2 வாகனங்களுக்கு ரூ. 37, 500 உடனடி இணக்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. மேலும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 5 வாகனங்களுக்கு இணக்கக்கட்டணமாக ரூ. 63,000 விதிக்கப்பட்டு அந்தந்த மோட்டார் வாகன பதிவு அலுவலகங்களில் செலுத்த உத்தரவிடப்பட்டது.