திருச்சி மாநகர குற்றப்பிரிவில் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் துறை உதவி ஆணையாளரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறைத் தலைவர் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையாளராகப் பணியாற்றி வந்தவர் அருள்அமரன் (56). திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த சீத்தாராமனிடம் இடப்பிரச்னை தொடர்பாக இம்மாதம் 9 ஆம் தேதி இவர் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதால் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இவரைப் பணியிடை நீக்கம் செய்து காவல்துறைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறையில் உள்ள அருள் அமரனிடம் சிறை அதிகாரிகள் வழங்கினர். கடந்த 1987-ல் பணியில் சேர்ந்த இவர் விரைவில் ஏ.டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற இருந்தார்.