திருச்சியில், மறைந்த தமிழ்த்தந்திப் புலவர் அ.சிவலிங்கனாருக்கு சனிக்கிழமை மாலை புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ் அமைப்புகள் சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு இலக்கிய திறனாய்வாளர் வீ.ந.சோமசுந்தரம் தலைமை வகித்தார். ம.செல்வராஜ், கவிஞர் கோ.கலியமுர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வீ.ந.சோமசுந்தரம் பேசுகையில், புலவர் சிவலிங்கனார் தமிழில் தந்தி கொண்டு வந்தது மட்டுமின்றி தனது வாழ் நாள் முழுவதும் பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்தார். திருக்குறளுக்கு 3 நூல்களை எழுதி உலக கருத்துக்கு ஒப்பான கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஒவிய நாடு பத்திரிக்கையில் ரஷிய கவிதைகளை மொழி பெயர்த்து எழுதியதால் சோவியத் நாடு விருது வழங்கி கௌரவித்தது. தமிழில் தந்தி கொண்டு வந்து பாரதிதாசனிடம் பாராட்டு கவிதை பெற்றவர் என்றார். கூட்டத்தில், முனைவர் இரா.காமராசு, முனைவர் கு.திருமாறன் உள்ளிட்டோர் பேசினர். முடிவில் சு.மனோன்மணி நன்றி கூறினார்.