திருச்சி மாவட்டம், முசிறியில் ரூ. 51 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிக் கொலுசுகளைத் திருடிய இரு பெண்களை முசிறி போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
முசிறி போலீஸார் முசிறி கைகாட்டி பகுதியில் ஜூலை 12 ஆம் தேதி மாலை ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரு பெண்களை விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி சோதனை செய்தபோது அவர்களின் உள் பாவாடையில் அமைக்கப்பட்டிருந்த பையில் சுமார் 15 வெள்ளி கொலுசுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் அவர்கள் கந்தர்வகோட்டையைச் சேர்ந்த குமார் மனைவி ஜான்சி (எ) ஜான்சிராணி (32) தஞ்சாவூரை சேர்ந்த மனோகரன் மனைவி சாந்தி (50) என்பது தெரியவந்தது. மேலும், முசிறி துறையூர் சாலையில் முசிறி இ.ஒன். காவல் நிலையம் எதிரே முசிறியை சேர்ந்த இ. சந்தோஷ்குமார் (25) என்பவரின் நகைக் கடையில் ஊழியர்களுக்கு தெரியாமல் ஜூலை 12 ஆம் தேதி மாலை கொலுசு திருடியதாகவும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து கடைக்காரரிடம் போலீஸார் விசாரித்து, புகார் பெற்று இரு பெண்களையும் கைது செய்தனர்.