திருச்சியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருச்சி உறையூர், ராமலிங்க நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் சே. பட்டுதுரை. இவர் ஜூன் 8 ஆம் தேதி வீட்டின்முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என உறையூர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், திருச்சி உறையூர் கோணக்கரை பகுதியில் போலீஸார் புதன்கிழமை மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், போலீஸாரைக் கண்டதும் வாகனத்தை போட்டுவிட்டு, தப்பிச்செல்ல முயன்றார்.
அவரை பிடித்து நடத்திய விசாரணையில், அந்த வாகனம் பட்டுத்துரையுடையது என்பது தெரிந்தது. அவருடைய பெயர் உறையூர் தோப்புக்குளம், ஸ்டேட் வங்கி காலனி பகுதியைச் சேர்ந்த அ. அரவிந்த் (25) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அந்த நபர் அளித்த தகவலின் பேரில் 3 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.