திருச்சி மக்களவைத் தொகுதிக்கு மார்ச் 19ஆம் தேதி முதல் இரு இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
திருச்சி மக்களவைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆட்சியரிடமும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். முற்பகல் 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை மட்டுமே மனுதாக்கலுக்கு அனுமதிக்கப்படுவர்.
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர். வரும் 26ஆம் தேதி மாலை 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம்.
மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 27 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 29 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தேர்தல் ஆணைய உத்தரவுகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளார்.