திருச்சி கம்பரசம்பேட்டை காவிரி ஆற்றில் ஆழ்துளைக் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
கம்பரசம்பேட்டை காவிரி ஆற்றில் குடிநீர் திட்டப்பணிகளுக்காக பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் ஒரு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்காக ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக பொதுப்பணித்துறை ஊழியர்கள் வியாழக்கிழமை அப்பகுதிக்கு வந்தனர். இதையறிந்த கம்பரசம்பேட்டை பொதுமக்கள் திரண்டு வந்து ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஊழியர்கள் திரும்பி சென்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆழ்துளை கினறு அமைக்கஊழியர்கள் வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வந்து பணிகளை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால்அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டனர்.