பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக உள்ளது என்று தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் திருச்சியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் மகளிருக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்திலிருந்து இதுவரை 69 புகார்கள் வரப்பெற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் பெண்கள் விடுதிகள் செயல்படுவதற்கு 145 விண்ணப்பங்கள் வரப்பெற்று முதல் கட்டமாக 43 விடுதிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி சம்பவம் குறித்து குழு அமைத்து மாவட்ட கண்காணிப்பாளர், காவல்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் விசாரணை நடத்தப்படும். பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் பாதிக்கபட்ட பெண்களின் பெயர் குறிப்பிட்டது குறித்து விளக்கம் கேட்கப்படும். பெண்கள் பாதிப்பில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக உள்ளது.
பெண்கள் வன்கொடுமைகள் அதிகாரிக்க காரணமான மதுக்கடைகளை மூட தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்படும். குழந்தை திருமணம், பெண்கள் வன்கொடுமை போன்றவற்றில் பாதிக்கப்படுபவர்கள் உதவி எண்களை தொடர்பு கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் தங்களுக்கு வரும் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க வேண்டும். செல்லிடபேசியை நற்செயலுக்கு பயன்படுத்த வேண்டும் என்றார். மாவட்ட சமூக நல அலுவலர் ஏ.தமிமுன்னிசா உடனிருந்தார்.