திருச்சியில் வாகன சோதனையில் ரூ.8 லட்சம் பறிமுதல்
திருச்சியில் இருவேறு இடங்களில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.8 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தேர்தல் பறக்கும்படையினர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி- புதுக்கோட்டை சாலையில் பறக்கும் படை வட்டாட்சியர் ஸ்ரீ மோகனா தலைமையில் வியாழக்கிழமை வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டதில் ரூ.4.55 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் இருசக்கரத்தில் வந்தவர் பழனியைச் சேர்ந்த மூர்த்தி என்பதும், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி கிழக்கு வட்டாட்சியர் சண்முகவேலனிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல உறையூர் குழுமணி சாலையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் ல் நடத்திய சோதனையில், உறையூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது காரில் ஆவணங்களில்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.3.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.