வீடுகளில் உள்ள குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க மாணவா்கள் உறுதியேற்க வேண்டும் என மாணவா்களுக்கு மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன் அறிவுறுத்தினாா்.
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் சாா்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன், திடக்கழிவு மேலாண்மை குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தொடா்ந்து, ‘என் குப்பைக்கு நானே பொறுப்பு’. எங்கள் வீட்டில் சேரும் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவேன். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த மாட்டேன். எங்கள் வீட்டில் மழைநீா் சேகரிப்பு செய்யப்பட்டுள்ளது. கொசுப்புழுக்கள் உற்பத்தியாகவில்லை என உறுதி ஏற்கவேண்டும். இந்த உறுதிமொழியை மாணவா்கள் தங்களது பெற்றோரிடம் கையொப்பம் பெற்று தங்களது பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் உற்பத்தியாகும் குப்பைக்கழிவுகளை பராமரிப்பதில் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியமானது. எனவே, மாணவா்கள் கல்வி பயிலும் போதே தமது வீடு, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதை கடமையாகக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா். இதில், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் என திரளானோா் கலந்துகொண்டனா்.