திருச்சியில் இரு இளைஞர்கள் தாக்கியதில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் (40). தொழிலாளியான இவர், வெள்ளிக்கிழமை வேலைக்குச் செல்வதற்காக காஜாப்பேட்டை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த காஜாபேட்டை விஜய் பாபு(22) விமல்(21) ஆகிய இருவரும் காமராஜிடம் தகராறு செய்து கல்லால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து, விமல், விஜய்பாபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.