திருச்சி முகாம் சிறையில் இருந்து தப்பியோடிய நைஜீரியா நாட்டு கைதியை புதுதில்லியில் தனிப்படை போலீஸார் கைது செய்து திருச்சிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் 41 இலங்கை தமிழர்கள், நைஜீரியாவைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 48 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில், நைஜீரியாவைச் சேர்ந்த ஸ்டீபன் பால் அப்புச்சி (31) என்பவர் போலி கடவுச்சீட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஜூலை 19-ஆம் தேதி அதிகாலை ஸ்டீபன் பால் சிறை சுவரின் அருகே இருந்த 25 அடி உயர பெரிய மரத்தில் ஏறி தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்து கே.கே. நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், ஆய்வாளர் சகாய அன்பரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ராஜஸ்தான், மும்பை உள்ளிட்ட இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஹரியாணா மாநிலத்தில் உள்ள பிரபல போதை பொருள் விற்பனை கும்பலுடன் தங்கியிருந்த ஸ்டீபன் பால் அப்புச்சி புதுதில்லியில் இருப்பதாகத் தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் அங்கு சென்று தனி அறையில் பதுங்கியிருந்த ஸ்டீபன் பால் அப்புச்சியை வெள்ளிக்கிழமை கைது செய்து பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்து வருகின்றனர்.
தப்பியோடிய நைஜீரிய கைதியை பிடித்த தனிப்படை போலீஸாரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் பாராட்டினார்.