வழிப்பறிக் கொள்ளையர்கள் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுவேல் மகன் ரமேஷ்(43). இவர் கடந்த மாதம் 19ஆம் தேதி திருவானைக்கா பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த சங்கிலியாண்டபுரம் காந்தி தெருவைச் சேர்ந்த ஞானராஜ் மகன் ஜோன்ஸ் டார்வின்(23) ரமேஷிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது சட்டைபையில் இருந்து ரூ. 1,000 ரொக்கத்தை பறித்து கொண்டு தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்கு பதிந்து ஜோன்ஸ் டார்வினை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த நிலையில் ஜோன்ஸ் டார்வின் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறை ஆணையர் அ.அமல்ராஜ் உத்தரவிட்டார். இதன் பேரில் சிறையில் அடைக்கப்பட்டள்ள ஜோன்ஸ் டார்வினிடம் இதற்கான நகலை போலீஸார் வெள்ளிக்கிழமை அளித்தனர்.
மற்றொரு நபர் கைது: மண்ணச்சநல்லூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ்(25). இவர் கடந்த 5ஆம் தேதி இரவு 8 மணிக்கு இருசக்கர வாகனத்தில் உளுந்தங்குடி பனந்தோப்பு அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உளுந்தங்குடி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் பிரேம்குமார்(20) கத்தியை காட்டி சுபாஷை மிரட்டி அவரது சட்டை பையில் இருந்து ரூ.500ஐ பறித்து சென்றார்.
இதுகுறித்து சுபாஷ் அளித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து பிரேம்குமரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள பிரேம்குமார் பல்வேறு குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவிட்டார். இதன் பேரில் சிறையில் உள்ள பிரேம்குமாரிடம் அதற்கான நகலை போலீஸார் வெள்ளிக்கிழமை வழங்கினர்.