பெரம்பலூர் அருகே பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களிடம் ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திருச்சியில் அக்கட்சி பிரமுகரின் வீடு, அவருக்குச் சொந்தமான நிதி நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
பெரம்பலூர் அருகே பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பிடிபட்ட தொகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில வர்த்தகர் அணிச் செயலர் ராஜாவின் நிதி நிறுவனத்திலிருந்து கொண்டு வரப்பட்டது என விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்த தகவல் வருமானவரித் துறையினருக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 10 பேர் கொண்ட வருமானவரித் துறை குழுவினர், புதன்கிழமை காலை மன்னார்புரத்தில் ராஜாவுக்குச் சொந்தமான நிதி நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.மேலும், கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனியிலுள்ள ராஜா வீட்டிலும் வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஏராளமான ஆவணங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.