திருச்சி கம்பரசம்பேட்டை தடுப்பணையில் தத்தளித்த மாணவர்கள் 2 பேர் திங்கள்கிழமை மீட்கப்பட்டனர்.
திருச்சி தென்னூர் ஆழ்வார்த்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நூர்இப்ராகிம்(21). திருச்சி தனியார் கல்லூரியில் இளநிலை வணிகவியல் படித்து வருகிறார். இவர் திங்கள்கிழமை காலை அதே பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் இம்ரானுடன்(15), கம்பரசம்பேட்டை தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது இருவரும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றின் நடுவில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை கண்ட அப்பகுதினர் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் மிதவை மூலம் இருவரையும் மீட்டனர். தொடர்ந்து இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.