திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாதுளாம்பிகை உடனாய ஸ்ரீ நாகநாதசுவாமி கோயிலில் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.
நாதஸ்வர மேளதாள மங்கல இசையுடன் கல்யாண சீர்வரிசைப் பொருட்கள் கோயிலை சுற்றி வந்து மூலவருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அங்கு கணபதிக்கும், தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கும் ஆராதனைகள் முடித்து மூலவர் ஸ்ரீ நாகநாத சுவாமி திருமுகம் காட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து மீனாட்சி அலங்காரத்தில் வீற்றிருந்த அருள்மிகு மாதுளாம்பிகைக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு மங்கள இசையுடன் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் எனும் மங்கல நாண் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின் மாலை மாற்று வைபவமும் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணம் முடிந்து சுமங்கலி பெண்களுக்கு மங்கல நாண், மஞ்சள், குங்குமம், வளையல், பூ, தாம்பூலம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் வே.பிரபாகர், அருணகிரிநாதர் அறக்கட்டளை நிர்வாகிகள், சிவச்சாரியர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பலர் செய்திருந்தனர்.