திருச்சி மாவட்டம் மணப்பாறையிலிருந்து திருச்சிக்கு கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை அரசுப் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறை பகுதியில் போதிய கல்லூரிகள் இல்லாத நிலையில், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் திருச்சியை நோக்கி கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. காலை 7.30 மணிக்குச் செல்லும் ஒரே ஒரு பயணிகள் ரயிலைத் தவிர்த்து அனைவரும் பேருந்துகளையே பயன்படுத்த வேண்டிய நிர்பந்த நிலை உள்ளது.
இந்தச் சூழலில் மணப்பாறையிலிருந்து திருச்சிக்குச் செல்ல பள்ளி, கல்லூரி நேரத்தில் போதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. அப்படி செல்லும் பேருந்துகளிலும் மாணவ மாணவிகளை ஏற்றிச்செல்ல மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. வழக்கம்போல் சனிக்கிழமை காலை காத்திருந்த மாணவ மாணவிகள் பேருந்து கிடைக்காததால் பேருந்துநிலையத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மாணவ மாணவிகளை சமரசம் செய்து பேருந்துகளை கூடுதலாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு பேருந்துகளில் ஏறி பயணித்தனர்.