தண்டனைக்கு பயந்து நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடியவர் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானதையடுத்து, அவரை மே 3 வரை சிறையிலடைக்க குற்றவியல் நடுவர் எம்.தர்மபிரபு உத்தரவிட்டார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம், கொடும்பம்பட்டி அருகேயுள்ள பாலாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி பிச்சையம்மாள் (45). கடந்த 2017, செப். 23 ஆம் தேதி அதே பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயில் ஏற்பட்ட தகராறில் பிச்சையம்மாளை அதே பகுதியைச் சேர்ந்த மணிமேகலை, அழகர்சாமி, பழனிச்சாமி உள்ளிட்ட மூன்று பேர் தாக்கினர்.
புகாரின்பேரில் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது. இதில், நீதிமன்றத்தில் ஆஜராகாத பழனிச்சாமிக்கு மணப்பாறை நீதிமன்றம் பிடிவாராண்டி பிறப்பித்தது. அதை ரத்து செய்யகோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பழனிச்சாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
அதை மணப்பாறை நீதிமன்றமே முடிவு செய்யலாம் என அளிக்கப்பட்ட தீர்ப்பை தொடர்ந்து கடந்த மார்ச் 4 ஆம் தேதி மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான பழனிச்சாமி, தண்டனைக்கு பயந்து நீதிமன்றத்திலிருந்து தப்பி ஓடினார். இந்நிலையில், சனிக்கிழமை மீண்டும் மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜரான பழனிச்சாமி மீது நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தப்பி சென்றது உள்ளிட வழக்குகள் பதியப்பட்டு மே 3-ஆம் தேதி வரை சிறையிலடைக்க குற்றவியல் நடுவர் எம்.தர்மபிரபு உத்தரவிட்டார்.