பொன்னமராவதி பகுதியில் அமைதி திரும்ப பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில இளைஞரணி தலைவர் ஆர்.வி. பரதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நிகழ்ந்த சம்பவம் வருந்தத்தக்கது. வன்முறைக்கு வன்முறையே தீர்வாகாது, அமைதி காத்து ஒற்றுமையுடன் வாழ அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புத்தர வேண்டும். தமிழகத்தில் முத்தரையர் இன மக்கள் 30க்கும் மேற்பட்ட பிரிவுகளாக பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
சம்பவத்துக்கு காரணமான ஆடியோ பதிவு குறித்து அப்பகுதி மக்களிடம் நிலைமையை விவரித்து சமாதானம் செய்துள்ளோம். மேலும் காவல் உயரதிகாரிகளை சந்தித்து, ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டறியத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இச்சம்பவம் தொடர்பான வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றார் அவர். அப்போது, முத்தரையர் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் மூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.