திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நீதிமன்ற உத்தரவின்படி செவ்வாய்க்கிழமை 300க்கும் மேற்பட்ட கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே இணைப்புச்சாலை அமைக்கப்படாமல் இருந்து வருகிறது.
இணைப்புச்சாலையை விரைவாக அமைக்க வலியுறுத்தியும் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாலும் திருச்சி மாநகர குடியிருப்போர் கூட்டமைப்பு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், துவாக்குடியில் இணைப்புச்சாலை அமைக்கப்படவுள்ள பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல்முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இந் நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு மீண்டும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அப்போது, விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் சாலையை ஆக்கிரமித்திருந்த சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகளின் விளம்பரப் பலகைகள், கூரைகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை அதிகாரிகள் பொருட்படுத்தாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.