மணப்பாறை அடுத்த என். பூலாம்பட்டி அருகேயுள்ள மதலப்பட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்ட நிலையில், இளைஞர் சடலம் மீட்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் என்.பூலாம்பட்டி அருகே உள்ள மதலப்பட்டியில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பணி செய்து வந்தவர் சின்னப்பன் மகன் ஜான் கென்னடி(35). செவ்வாய்க்கிழமை இரவு அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சடலமாக தூக்கிட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஷர்மு, வையம்பட்டி காவல் ஆய்வாளர் அனுஷ்கா மனோகரி தலைமையிலான போலீஸார் சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.