இஸ்ரோ நிறுவனத்தால் நடத்தப்படும் இளம் விஞ்ஞானி பயிற்சி முகாமுக்கு தேர்வாகியுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவருக்கு ஆட்சியர் சு. சிவராசு பாராட்டு தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், முசிறி கல்வி மாவட்டத்துக்குள்பட்ட நாச்சம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருபவர் ஆர். நித்தியராஜ். இவர், திருச்சி இஆர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இதன் தொடர்ச்சியாக, மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் முதலிடம் பிடித்தார். மேலும், பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் சிறப்பிடம் பெற்றார்.
இதையடுத்து, இஸ்ரோ நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இளம் விஞ்ஞானிகளுக்கான பயிற்சி முகாமுக்கு தேர்வாகியுள்ளார். திருவனந்தபுரத்தில் ஏப்.12ஆம் தேதி முதல் நடைபெறும் 2019ஆம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்கவுள்ளார். இந்த பயிற்சி முகாமானது 2 வாரங்கள் நடைபெறவுள்ளது.
அரசுப் பள்ளியில் பயின்று இஸ்ரோ நிறுவன பயிற்சி முகாமுக்கு தேர்வாகியுள்ள மாணவருக்கு ஆட்சியர் சு. சிவராசு புதன்கிழமை பாராட்டு தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித்திட்டம்) எம். வாசு, திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். ராமகிருட்டிணன் ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனர்.