சிந்தனை சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என்றார் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழக துணை வேந்தர் கமலாசங்கரன்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிலரங்கைத் தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது:
இந்தியா அடிப்படையில் விவசாய நாடு. ஆனால் எழுத்தறிவு பெற்ற பின் நாம் விவசாயத்தை மறந்து விடுகிறோம். கல்வி கற்றவர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டியது இன்றைய காலத்தில் அவசியமாகும். ஒவ்வொரு நாளும் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளை மாணவ மாணவிகள் வாசித்து தெரிந்து கொள்ள வேண்டும். நம் சிந்தனைகளை சக்தி வாய்ந்த சிந்தனைகளாக மாற்றி சமூகத்திற்கு பயன்படும் படியாக மாற்ற வேண்டும்.
வாக்களிப்பது மட்டும் நம் கடமை என்று இல்லாமல் சமத்துவத்துடன் ஆண் , பெண் பாகுபாடு சாதி மத வேறுபாடு களைந்து வாழ்தல் மாணவ மாணவிகளின் கடமையாகும் என்றார்.
நிகழ்வில் இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விழாவிற்கு பள்ளித் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் பி.சுவாமிநாதன், பொருளாளர் எஸ். செல்வராஜன், துணைத் தலைவர் எம்.குமரவேல், இணைச் செயலாளர் பி.சத்தியமூர்த்தி , பள்ளி முதல்வர் துளசிதாசன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர்கள் ச.தமிழ்செல்வன், பாஸ்கர் சக்தி, விஞ்ஞானி வெங்கடேசன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.