கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படுவதுபோல அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார் ஆசிய விளையாட்டில் வலுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற திருச்சி வீரர் மணிமாறன்.
திருச்சி மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் அ. மணிமாறன் (46). வனத்துறையில் ஓட்டுநராக பணியாற்றி வரும் இவர், அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஊர் திரும்பிய அவருக்கு ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த முறை ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற ஆசிய வலுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றேன். தற்போது ஹாங்காங்கில் நடைபெற்ற போட்டியில் 74 கிலோ எடைபிரிவில் பங்கேற்று, 567.5 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளேன். அரசுத்துறைகளில் பணியாற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் போது அதிகளவில் விடுமுறை அளிப்பது வழக்கம். ஆனால், எனக்கு மிக குறைவாகவே விடுப்பு வழங்கப்படுகிறது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற பின்னர் வழங்கப்படும் பணி உயர்வும், வெகுமதியும் வழங்கப்படுவதில்லை. பொதுவாகவே கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் பிற துறை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்நிலை மாறினால் பல்வேறு துறைகளிலும் பலரும் சாதனை படைக்க வாய்ப்புள்ளது.இந்த ஆண்டு இறுதியில், கனடாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க செல்லவுள்ளேன். அதற்கு யாராவது உதவிகள் செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.