திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள டால்மியாபுரம் கிளை நூலகத்தில் உலக புத்தக தினத்தினை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியினை எழுத்தாளர் ஆங்கரை பைரவி துவக்கி வைத்தார். இதில், பிரசித்தி பெற்ற அறிஞர்கள், விஞ்ஞானிகள், உலக அதிசயங்கள், தலைவர்கள், மகளிர், குழந்தைகள், போட்டித் தேர்வு நூல்கள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த உலக புத்தக தினத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த செ.விஸ்வா, செ.வினோத், செ.விஷ்ணு ஆகியோர் தலா ரூ. 1,000-ம் செலுத்தி புரவலர்களாக இணைந்தனர். மேலும் பொதுமக்கள் மாணவ மாணவிகள் என 10 பேர் நூலக உறுப்பினர்களாக இணைந்தனர். அவர்களுக்கு நூலக உறுப்பினர் அடையாள அட்டை, ஏற்கெனவே புரவலர்களாக இணைந்தவர்களுக்கு புரவலர் பட்ட சான்றிதழ் ஆகியவற்றினை நூலகர் சி.என்.சாந்தி வழங்கினார்.
இந்நிகழ்வில் எழுத்தாளர் சிந்தனைசெல்வன், வாசகர் வட்ட பொருளாளர் ம. ஜெயலட்சுமி, க.விஜயலட்சுமி, வாசகர் வட்ட உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர். நூலகர் சி.என்.சாந்தி வரவேற்றார். வாசர் வட்ட துணைத் தலைவர் த. செல்வராஜ் நன்றி கூறினார்.