திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில், லாரி மோதிய விபத்தில் ஞாயிற்றுக்கிழமை விவசாயி உயிரிழந்தார்.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி அடுத்த சொக்கநாதப்பட்டியை சேர்ந்தவர் வேலு மகன் சின்னச்சாமி(39). விவசாயி. ஞாயிற்றுக்கிழமை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை கிளாரா நகர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சாலையோரம் நின்றிருந்துள்ளார்.
அப்போது திருச்சி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத லாரி சின்னச்சாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில், பலத்த காயமடைந்த சின்னச்சாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார் சின்னச்சாமி உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள துவரங்குறிச்சி போலீஸார் விபத்தை ஏற்படுத்திய லாரியை தேடி வருகின்றனர்.