திருச்சி மாவட்டத்தில் நடமாடும் காசநோய் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
இதற்காக மாவட்டம் முழுவதும் செல்வதற்காக இரண்டு பிரத்யேக வாகனங்களில் நடமாடும் காசநோய் கண்டறியும் ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை வழியனுப்பும் விழா திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. வாகனங்களை வழியனுப்பி வைத்து ஆட்சியர் சு. சிவராசு கூறியது: திருச்சி மாவட்டத்தில் காசநோய் தொடர்பாக நடமாடும் வாகன பரிசோதனை முகாம் ஏப்.29ஆம் தேதி தொடங்கி மே 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நடமாடும் வாகனத்தில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர், முதல்நிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் உடனிருந்து பரிசோதனை மேற்கொள்வர். பொதுமக்கள் இந்த வாய்ப்பை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர். முதல்நாளான திங்கள்கிழமை திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட எம்ஜிஆர் நகர், வண்ணாரப்பேட்டை, தாராநல்லூர், இ.பி. சாலை, ஜெயில்பேட்டை, கூனிபஜார், பொன்மலைப்பட்டி ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பரிசோதனை செய்து கொண்டனர்.