எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் விரக்தியடைந்த பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்த குவளக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் மகள் இந்துமதி (15). புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் உள்ள அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து பொது தேர்வு எழுதியிருந்தார். திங்கள்கிழமை தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில், 400 மதிப்பெண்களுக்கு மேல் எதிர்பார்த்திருந்த இந்துமதி, 321 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டிற்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இந்துமதியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.